ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-16

(ஈழத்து வேதாந்தி ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதியின் உபதேச அடிப்படையில்)

வியாச பூர்ணிமா

OLYMPUS DIGITAL CAMERA

இந்தியாவின் வட மாநிலங்களில் குருவிற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அறியாமை என்னும் இருளை நீக்கி சத்திய ஒளியைத் தரிசிக்க வைக்கின்ற குருவை வட இந்தியர்கள் தெய்வத்திற்கும் மேலாக வைத்து மதித்துப் போற்றிக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆதி காலத்தில் ரிஷிகள் தான் குருவாக இருந்து குருகுல முறையில் வேத சாஸ்திரங்களையும், உபநிஷத்துக்களையும், புராணங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை கலைகளையும் மாணவர்களுக்குப் போதித்தனர். இவ்வகையில் வேதங்களை ஒன்று திரட்டி அவற்றைத் தொகுத்து நான்கு வேதங்களாக்கி நமக்குக் கொடையாக அளித்தவர் வியாசர். எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஆதி குரு வேத வியாசர் என்றே கூறலாம்.

வேதங்கள் பிரம்மாவைத் தான் ஆதி குரு என்று சொல்கின்றன. பரம்பொருள் அளித்த வேதங்களின் துணை கொண்டு பிரம்மா படைப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு சூரியனைக் குரு என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று கூறி, அவரிலிருந்து தான் குரு சிஷ்ய பரம்பரை உருவாயிற்று என்று கூறுகின்றனர். குரு தட்சிணாமூர்த்திக்கு சனகர், சனாதனர், சனத் குமாரர், சனந்தனர் என நான்கு சிஷ்யர்கள் இருந்தனர் என்றும், மௌனத்தாலேயே குரு அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இப்படி வந்த குரு பரம்பரையில் மறைபொருளாய் இருந்த வேதங்களை முறையாக வெளிப்படுத்தி, அவற்றை உரிய முறையில் தொகுத்து, மனித சமுதாயத்திற்கு சனாதன தர்மத்தை உருவாக்கியவர் மகரிஷி வியாசரே ஆவார். வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணாச்சார்யர் எனக் குரு பரம்பரை நீண்டுகொண்டே வந்து இன்று வரை இருக்கின்ற குரு பரம்பரையாக விளங்கி வருகின்றது. இது ரிஷி பரம்பரை.

நான்முகனான பிரம்மாவிற்கே முழு வேதங்களின் அளவு என்ன என்று தெரியாது. இந்நிலையில் நாராயணனே வியாச முனிவராக அவதரித்து வேதங்களைக் கொஞ்சம் சொல்லி வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. வியாசருக்கு பைலர், வைசம்பாயணர், ஜைமினி, சுமந்து என்று நான்கு சிஷ்யர்கள் இருந்தனர். வியாசர் அவர்களுக்குத் தான் கண்டறிந்த வேத உண்மைகளை மீண்டும் மீண்டும் சொல்லித் தந்தும், அவற்றை முழுவதுமாகப் பயின்று புரிந்து கொள்ள இயலாமல் சிஷ்யர்கள் சிரமப்பட்டனர்.அதைக் கண்ட வியாசர் அவர்களிடம் வேதங்களின் பரிமாணத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

முன்னொரு காலத்தில் பரத்வாஜர் என்ற முனிவர் பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் செய்தார். பிரம்மதேவன் அவருக்குக் காட்சியளித்ததும் அவர், தான் பிரம்மசாரியாக இருந்து வேதங்கள் அத்தனையையும் கற்க வேண்டுமென்றும், தாங்கள் தான் அதை எனக்குக் கற்பிக்க வேண்டுமென்றும் வேண்டினார். அதற்குப் பிரம்மா, வேதங்கள் எவ்வளவென்று எனக்கே தெரியாது. அவை எண்ணிக்கையில் அடங்காதவை. ஆனால் அவற்றின் பரிமாணத்தை உனக்குக் காட்டுகிறேன் என்று சொல்லி ஞானப் பார்வையில் காட்ட அவை கோடி சூரிய பிரகாசமுள்ள மூன்று பெரிய மலைகளாகக் காணப்பட்டன.

அவற்றைக் கண்டு திகைத்துப்போன பரத்வாஜர் பிரம்மாவை வணங்கித் தன்னை மன்னிக்கும்படியும் தான் மிகவும் ஆசைப்பட்டுவிட்டதால் பிரம்மாவிற்கு விருப்பமான அளவில் வேதங்களைக் கற்றுக் கொடுக்கும்படியும் பக்தியுடன் கேட்டுக்கொண்டார். பிரம்மா அந்த மூன்று குவியல்களிலிருந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து அவரிடம் கொடுத்து அவற்றைப் பயிற்சி செய்யும்படி சொன்னார். அதைத் தாமும் அறிந்துகொண்டு அந்த மூன்று வேதங்களிலிருந்து மந்திரங்களை மட்டும் தனியாகப் பிரித்து நான்காவது வேதமாகச் செய்ததாகவும் அவையே ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் என்றும் வியாசர் தம் சீடர்களுக்குச் கூறினார்.

நான்கு வேதங்களிலும் இருந்து நான்கு மகா வாக்கியங்கள் பிரம்மாவால் உச்சரிக்கப்பட்டன என்று அந்த நான்கு வாக்கியங்களையும் வியாசர் எடுத்துரைத்தார். அவை பிரக்ஞானம் பிரம்மம், அயம் ஆத்மா பிரம்மம், தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்பனவாகும். பின்னர் வியாசரே பைலர் என்ற சீடருக்கு ருக் வேதத்தையும், வைசம்பாயணருக்கு யஜூர் வேதத்தையும், ஜைமினிக்கு சாம வேதத்தையும், அதர்வண வேதத்தை சுமந்து என்ற சீடருக்கும் முறையாகக் கற்பித்தார். அதன்பின் வியாசர் அந்த வேதங்களை இந்தப் பூமி முழுவதும் பரப்பும்படி தன் சிஷ்யர்களிடம் கூறினார்.

வேதங்களை வெளிப்படுத்தி அவற்றை மிக விரிவாக வகைப்படுத்தித் தம் சீடர்களுக்கு போதித்ததனால் அவர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். இது ஒரு புராணக் கதைதான் என்றாலும் இதன் உட்பொருளைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். பிரம்ம தத்துவம் அறிதற்கு அரிதானது. அவரவர் அனுபவத்திற்கேற்ப ஆத்ம அறிவிற்குப் பிரம்ம தத்துவம் விரியும். வியாசர் தம் தவத்தால் கைவரப்பெற்ற உள் தொடர்பால் தெய்வீக சக்தி தமக்களித்த உண்மைகளைப்பற்றியே இவ்வாறு புராணக்கதையாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபஞ்ச ரகசியம் மிகக் கொஞ்சமாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது: இன்னும் அறிய வேண்டிய உண்மைகள் மலைபோல் குவிந்திருக்கின்றன என்பது தான் இதன் உட் பொருள்.

வியாசர் சிரஞ்சீவி. இவர் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆதி சங்கரர், மண்டன மிகிரர் என்பவரை வாதத்தில் வெல்லப் போகுமுன் வியாசரை சந்தித்து உரையாடி மீமாம்சத்தில் பல ஐயங்களைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு. வட இந்தியாவில் வியாச குகை என்று இன்றும் இருக்கிறது.

மகா பாரதத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வியாசரைப் பற்றி பீஷ்மர், நாராயணனின் அம்சமும், சக்தியின் பேரனும், பராசர முனிவரின் மகனுமாகிய வியாசரை வணங்குகிறேன்! என்று கூறுகின்றார். வியாசர், பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர். சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்.

வியாசர் மகா பாரதத்தை இயற்றியபோது, அவர் சொல்வதைக்கேட்டு விநாயகர் தான் பொருள் புரிந்து அத்தனை சுலோகங்களையும் எழுதினார் என்று சொல்லப்படுகின்றது. வியாசர் 18 வகையான புராணங்களை எழுதியதால் தான் இந்து தர்மத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும் அவற்றிற்குரிய ஏராளமான கதைகளும் உருவாகி, அவற்றின் உள் தத்துவங்கள் புரியாததால் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என்று கூறலாம். தத்துவத்தைக் கதைகளாக விளக்கப்போய் இப்போது தத்துவம் தெரியாமல் மக்கள் கதைகளோடு மட்டும் நிற்கின்றனர்.

ஆனால் அதே சமயம் புராணங்களின் வாயிலாகத்தான் இந்துக் கலாச்சாரம் வெளிப்பட்டது என்பதும் உண்மை. சாதாரண மக்கள் தர்மப்படி வாழ்ந்தால் வாழ்க்கையை வெல்லலாம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதற்காக அவர் அவற்றை எழுதி வைத்தார். மக்களோ கதைகளைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்களே தவிர, தர்மப்படி வாழ முயற்சிக்கவில்லை.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய நெறிமுறைகளை ஆத்மா சார்ந்த தர்மநெறி வாழ்க்கையை அவர் புராணங்களில் கதைகளாகக் கதாபாத்திரங்களாக அமைத்துத் தந்தார். இன்றைய நமது இந்து மரபிற்கு வித்திட்டவரான, ஆதியும் மூலமுமான குருவாய்த் திகழ்கின்ற வியாசரை நாம் நன்றியுடன் போற்றித் துதி;க்க வேண்டும்.

அவரைப்பற்றி மேலும் மேலும் அதிகத் தகவல்களை மிகத் தெளிவாகக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வடமொழியிலிருந்து உண்மைகளை எடுத்துத் தமிழில் நமக்கு வழங்கிய கம்பரையும், திருவள்ளுவரையும் கொண்டாடுகின்ற நாம் இவர்கள் பயின்ற வேதங்களை வடிவப்படுத்தித் தந்த வியாசரைப் பற்றியும் நன்கு தெரிந்து வணங்க வேண்டும். வியாசர் இல்லையேல் நமது சனாதன தர்மத்தின் பெருமையும், உயர்வும், சிறப்பும் இந்த அளவிற்கு வெளிப்பட்டிருக்காது. வேத விற்பன்னராகத் திகழ்பவர்களுக்கு வியாசர் தான் மிகச் சிறந்த வேத வழிகாட்டியாக விளங்குகின்றார்.