குழந்தைகள் வளர வளர அந்த வீட்டில் பிரச்னைகளும் வளர ஆரம்பித்தது. கடை நிர்வாகம், வீட்டு நிர்வாகம் என்று அல்லாடியதில் குழந்தைகளைச் சரியாகக் கண்காணித்து வளர்க்க முடியாமல் குமரேசனும் கங்காவும் தவித்தனர். எல்லாக் குழந்தைகள் ஒழுங்காக இருந்தும் சுந்தரம் மட்டும் தறுதலையாகவே ஆகி விட்டான். பள்ளியில் சென்று படிக்கப் பிடிவாதமாக மறுத்தான். ஊர்ப் பிள்ளைகளுடன் சேர்ந்து வெட்டியாகச் சுற்றினான். யார் கண்டித்தும் கட்டுப்படும் நிலையில் அவன் இல்லை. எவ்வளவோ தண்டனைகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர் அந்தக் கால வழக்கப்படி அவனது கால்களில் இரும்புக் குண்டு போட்டுக் கட்டி வகுப்பில் இருக்க வைப்பார். அவனோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து சங்கிலியை அவிழ்க்கச் செய்து ஓடிப் போய்விடுவான். வீட்டில் அடங்காமல் அட்டகாசம் செய்வான். தான் செய்த குற்றங்களை எல்லாம் உடன் பிறந்தவர்கள் தலையில் கட்டி விடுவான். விளையும் பயிர் முளையிலே! என்பதற்கேற்பக் கடைசி வரை அவன் பிரச்னைக்குரிய ஒருவனாகவே இருந்து விட்டான். கங்கா குமரேசனுக்கு அவனது முறையற்ற செயல்கள் அனைத்தும் பெரும் தலைவலியாக மாறி விட்டன.
அது ஒரு கார்த்திகை மாதம்! தீபாவளி அமர்க்களமெல்லாம் முடிந்து வீதிகள் கார்த்திகை தீப வரிசைகளை எதிர் பார்த்திருக்கும் நேரம.; கங்காவின் வீட்டிலோ சூழ்நிலை சரியில்லை. மூத்த பெண் சீதாவிற்கு ஊதுகணை யென்ற நோய் வந்து முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி ஒருவர் துணையுடன் தான் எல்லாம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாள். சுந்தரத்தை இரண்டு நாளாகக் காணவில்லை. எங்கே போனானோ என்ற கவலை ஒருபக்கம். ஐந்தாவதாகப் பிறந்து வளர்ந்து வந்த பெண் காயத்ரி. மிக அழகான புத்திசாலியான சிறுமி. அவளென்றால் எல்லோருக்குமே கொள்ளைப் பிரியம். வெடுக் வெடுக்கென்று அருமையாகப் பேசுவாள். யாராயிருந்தாலும் அவளிடம் இரண்டு வார்த்தையாவது பேசாமல் போகமாட்டார்கள். அப்படிப்பட்ட சுட்டிப் பெண் நான்கு நாட்கள் ஜூரம் வந்து கண்ணைத் திறக்காமல் தரையில் பறித்துப்போட்ட முல்லைக் கொடி போலக் கிடக்கிறாள்.
கங்காவின் மனம் அழுதது. ‘கைலாசநாதா! ஏனப்பா எங்களை இப்படி சோதிக்கறே! நாங்க என்ன பண்ணுவோம்!’ என்று அரற்றிக் கொண்டே வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
அன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள். எல்லோர் வீட்டிலும் தூசி படிந்து கிடந்த குத்துவிளக்குகள்இ பரண் மீது கிடந்த அகல் விளக்குகள் எல்லாம் வெளிப்பட்டு முற்றத்தில் நீரில் மூழ்கிக் கிடந்தன. அவற்றைத் துலக்கி எடுத்து மணைப் பலகைகளில் கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்த அகல் விளக்குகளை அவற்றில் அடுக்கி, பறித்து வந்த பூக்களைத் தொடுத்து, பூஜைக்குரிய பொருள்களைச் சேகரித்து எல்லோர் வீட்டிலும் முருகனை மனதாரத் துதித்தபடி தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்த நேரம்.
அன்று காலை எழுந்ததிலிருந்தே கங்காவிற்கு உடம்பு சரியில்லை. கோனார் வராததால் அவளே பால் கறக்க வேண்டியதாயிற்று. அந்த மாடுகள் இரண்டும் கோனாரில்லாவிட்டால் கங்காவின் கைகளுக்கு மட்டுமே மடி திறக்கும். வேறு யாராவது கிட்டே நெருங்கினால் முட்டித் தள்ளத் தலையை சாய்க்கும். எப்படியோ தட்டுத் தடுமாறி மாட்டுத் தொழுவ வேலையை முடித்தவள், குளித்து, ஸ்வாமி கும்பிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தாள், அதற்குள் ஒரு அத்தை பாட்டி குமட்டி அடுப்பில் கரியைப் போட்டுக் காபி டிகாஷ்ன் இறக்க வென்னீரைப் போட்டுவிட்டு வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். உள்ளே வந்ததும் கங்காவிற்கு இடுப்பும் கால்களும் இற்றுப் போய்விடும் போல் வலித்தன. இரவு முழுவதும் அந்த வலி அவளைப் படுத்திக்கொண்டே இருந்தது. வலி தாங்க முடியாமல் துடித்த கங்கா, “பாட்டி! ஒரு வாய்க் காப்பி கலந்து தாங்கோ! எனக்கு என்னவோ பண்றது. என்று சொல்லிவிட்டு, “ஸ்ரீ ராமா! ஸ்ரீ கிருஷ்ணா! இந்தக் கார்த்திகை பண்டிகை நல்ல படியா முடியணுமப்பா! தெம்பைக் கொடு!” என்று பகவானை வேண்டினாள். ஆனால் அவளுக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. இடுப்பிலும் வயிற்றிலும் சொல்ல முடியாத வலி அலையலையாகப் பரவ ஆரம்பித்ததும் அவளுக்கு தன் வயிற்றிலிருக்கும் ஆறு மாதக் கருவிற்கு ஏதோ ஆகி விட்டதென்று புரிந்து போயிற்று.
இருண்ட மேகம் சூரியனை மறைத்துப் பூமியை இருட்டாக்கி விடுவதைப்போல அவள் மனதை ஒரு மாபெரும் இருட்டு விழுங்கியது. வேலை செய்ய வந்த பாட்டியைக் கூவியழைத்தபடி கீழே மயங்கிச் சாய்ந்தாள். “ஐயய்யோ! கங்கா கீழே விழுந்துட்டாளே!” என்று அந்தப் பாட்டி போட்ட சத்தத்தில் எல்லோரும் ஓடி வந்தனர். அனுபவம் நிறைந்த அந்தப பாட்டி கங்காவின் நிலமையைப் புரிந்துகொண்டு, “புருஷா எல்லாம் குழந்தேளை அழைச்சுண்டு சித்த அந்தண்டை போங்கோ! மருத்துவச்சிக்கு ஆள் அனுப்புங்கோ! மீனாட்சி, சுந்தரி! வாங்கோ! கங்காவைத் தூக்கி இரும்புப் பெட்டி ரூமுக்குக் கொண்டு போங்கோ” என்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு செயல் பட ஆரம்பித்தாள். என்ன ஏது என்று புரியாத இரண்டுங்கெட்டான் குழந்தைகள் ஆண்களின் அரவணைப்பில் அங்கிருந்து வெளியேறினர். கங்காவை உறவுப் பெண்கள் சூழ்ந்து உதவிகள் செய்தனர்.
“ஈஸவரா! பகவானே!” என்ற கங்காவின் அலறலுடன் அவள் மணி வயிற்றில் வாய்த்திருந்த அணிவிளக்கு வெறும் சதைப் பிண்டமாகிக் குறைப் பிரசவமாக வெளியாகிவிட்டது. தன்னிலை மறந்து கிடந்த கங்காவிடம் காலதேவன் தன் கருணையைக் காட்டினான் இல்லை. தர்மத்தின் தலைவனாக, அவரவர் கர்மப் பலன்களுக்கேற்பத் தன் விருப்பு வெறுப்பற்ற செயல்களைத் தொய்வின்றிச் செய்துகொண்டே இருக்கும் அந்தத் தர்ம மகாராஜன் தன் கடமையே கண்ணாக, யாருடைய இன்ப துன்பங்களுக்கும் நான் பொறுப்பல்ல் என் கடன் உயிர் கவர்ந்து பூ பாரத்தைக் குறைப்பதே! என்பதைப்போல ஒரு குறை உயிரோடு மட்டும் செல்வதற்கு மனமின்றிக் கூடத்தின் ஒரு பக்கம் ஜூரத்தால் வாடித் துவண்டு கிடந்த காயத்ரியையும் வெறும் சரீரமாக ஆக்கிவிட்டு அவளின் உள்ளிருந்த உயிர் ஜோதிச் சுடரைக் கையிலெடுத்துக் கொண்டு, “காயத்ரி! வா என்னுடன்! உனது கர்மா இனி வேறு இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் தொடர வேண்டும்!” என்று முணுமுணுத்துப் புறப்பட்டுவிட்டான், யாரும் அறியாத வண்ணம்.
அம்மா இப்படித் திடீர்னு மயக்கமாகி விழுந்துட்டாளே! இப்ப நாம என்னடி பண்றது? பசங்களையெல்லாம் பள்ளிக்கூடம் கிளப்ப வேண்டாமா என்று கட்டிலில் படுத்துக் கிடந்த சீதாவிடம் கேட்டுக்கொண்டே, தற்செயலாகக் காயத்ரியைத் திரும்பிப் பார்த்த பர்வத அத்தை ஏதோ சந்தேகப்பட்டாற்போல அவளை அருகில் சென்று பார்த்தாள். உடனே உடல் முழுவதும் நடுங்கப் பதறும் குரலில், “சீதே! இங்கே பாருடி! காயத்ரியைப் பாருடி! யாராவது ஓடி வாங்கோ! காயத்ரி! காயத்ரி! என்று அலறினாள். அவள் போட்ட சத்தத்தில் அதிர்ந்து போய் அரை நொடியில் அனைவரும் அங்கிருந்தனர். சீதாவோ எழுந்தும், நடந்து போக முடியாமல் இருந்த இடத்தில் அழ ஆரம்பித்தாள்.
அம்மா மயக்கமாகிக் கீழே விழுந்து விட்டாள் என்று ராமேஸ்வரன் அரக்க பரக்க ஓடி வந்து சொன்னதைக் கேட்டுக் கடையை அவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் காற்றெனக் கடுகி வீட்டையடைந்து ரேழியில் கால் செருப்பைக் கழற்றிக்கொண்டிருந்த குமரேசன் அந்தக் கூக்குலைக் கேட்டு, நெஞ்சை ஏதோ பனிப்பந்து கனமாக வந்து அடைப்பதைப் போன்ற உணர்வு தாக்கக் கண்களுக்கெதிரே பூச்சி பறக்க, உடல் தள்ளாட, தட்டுத் தடுமாறித் திண்ணையில் சரிந்துவிட்டான்.
வீட்டுப் பொம்மனாட்டிகள் மூலமாகக் குமரேசன் ஆத்தில் நிலவரம் சரியில்லையென்று கேள்விப்பட்டு, தான் என்ன செய்வது என்ற யோசனையோடு தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ராமஸ்வாமி ஐயர், “வேளை கெட்ட வேளையில் குமரேசன் ஆத்துக்குப் பரபரப்பாக போறானே! என்னன்னு தெரியலியே! எதுக்கும் போய்ப் பார்ப்போம்!” என்று தெருவில் இறங்கி வந்தவர், குமரேசனின் நிலை குலைந்த தோற்றத்தைக் கண்டுப் பதறிப் பாய்ந்தோடி வந்துப் படியேறி, “என்னப்பா! குமரேசா!” என்று நின்றாரோ இல்லையோ, குமரேசனின் கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடும் பறந்து போய் விட, “மாமா! நான் யாருக்கு என்ன துரோகம் செஞ்சேன்! என்னை ஏன் பகவான் இப்படி சோதிக்கணும்? என் பொண்ணு!”..என்று
அதற்கு மேல் பேச முடியாமல் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான். அவனை ஆசுவாசப்படுத்தி, “இன்னும் நீ ஆத்து உள்ளேயே போகலியே! அதுக்குள்ளே என்னன்னு கண்டே! வா! உள்ளே போய்ப் பார்க்கலாம்!” என்று சொல்லி அவனைத் தூக்கி நிறுத்தி உள்ளே இழுத்துச் சென்றார் அந்தப் பெரியவர்.
அப்பாவின் தலையைக் கண்டனரோ இல்லையோ அங்கிருந்த குழந்தைகள் எல்லோரும் அப்பா…ஆ..ஆ! என்று பெருங்குரலில் அழ ஆரம்பித்து விட்டனர். பச்சைக் கிளியாய், செல்லப் பெண்ணாய், கன்றுக் குட்டியாய்த் துள்ளித் திரிந்த, எல்லோரிடமும் அன்பாக விளையாடி மகிழ்வித்த அருமைச் சகோதரி இனி நமக்குப் பயன்பட மாட்டாள்! என்ற உண்மை புரிந்து அனைவரும் அந்த இழப்பைத் தாங்க இயலாமற் கதற, பெண்மணிகள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தியபடி சத்தமில்லாமல் குலுங்கி அழக் குமரேசன் துண்டால் மறைத்துத் தன் அழுகையை அடக்கித் தன் அருமைத் துணைவி, பொறுமையின் சிகரமான கங்கா இதை எப்படித் தாங்கினாள், அவள் எங்கே? என்ற எண்ணத்துடன் அடுக்களைப் பக்கம் போனான். அங்கே ஏக அமர்க்களம்.
பர்வதத்து அத்தை வந்து, “குமரேசா! உனக்கு இப்போ போறாத காலமோடா! கங்காவுக்குக் கர்ப்பம் கலைஞ்சு கண்ணைத் திறக்காம கிடக்கா. இரும்புப் பெட்டி ரூமிலே அவளைப் படுக்க வெச்சிருக்கு. காயத்ரி போனது கூட அவளுக்குத் தெரியாது. எதோ எங்களுக்குத் தெரிஞ்ச தெய்வத்தையெல்லாம் நாங்க வேண்டிண்டிருக்கோம், வேற வழி தெரியலேடாப்பா! மருத்துவச்சி வந்திருக்கா! ஹூம்! மனசைத் தேத்திக்கோ! குத்து விளக்காட்டமாகக் குழந்தை ஓடியாடி வீட்டை நெறைச்சா! இப்படி இத்தனை சுருக்காப் போறதுக்குத்தான் அத்தனை ஆட்டம், பாட்டம்னு நாம கண்டமா, என்ன? பகவான் பேர்ல பாரத்தைப் போட்டுவிட்டு ஆக வேண்டியதைப் பாரு. கங்கா கட்டையாட்டமாக் கெடக்கா! பொண்ணு போன சேதி இப்போ அவளுக்குத் தெரிஞ்சா அவ உசிரு உடம்புல தங்காதுன்னுட்டுத் தான் பகவான் அவளை இப்படிக் கட்டையாப் போட்டுட்டான் போல இருக்கு!” என்று அழுதுகொண்டே திக்கித் திணறிப் பேசி அவனுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி உலக நடப்புகளுக்குக் குமரேசனை உசுப்பித் திருப்பி விட்டாள், அந்த உற்றுழி உதவும் உண்மை உள்ளம் கொண்ட உறவினள். துடைக்கத் துடைக்க வழியும் கண்களைக் கசக்கிய படி கங்காவை ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுக் கூடத்திற்கு வந்தான் குமரேசன். அன்று அந்தத் தெருவில் யார் வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. எல்லோர் வீட்டிலும் துக்கம். எல்லோர் வாயிலும் கங்காவின் துயர நிலை பற்றிய பேச்சு. எல்லோர் வயிற்றிலும் காயத்ரியைப் பறி கொடுத்த சங்கடம்.
இந்த இடத்தில் அந்தக் காலத்தியக் கட்டுக் கோப்பான வாழ்க்கையமைப்புப் பற்றியும் சற்றுப் பேசித்தான் ஆக வேண்டும். அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் சாவு என்றால்; அந்தத் தெருவினர் அனைவரும் அந்த வீட்டில் இருப்பார்கள். அந்த வீட்டினரின் துயரத்தை அனைவரின் துக்கமாகப் பகிர்ந்து கொள்வார்கள். கூட இருந்து எல்லாவற்றிலும் பங்கெடுத்து வீட்டிற்கு வந்த பின்பும் சென்றவரின் குணங்களைப் பற்றிப் பேசிப் பேசிக் கண்ணீர் சிந்துவர். இறந்தவர் வீட்டில் அடுப்பெரியக்கூடாது என்று ஒரு சாஸ்திரத்தை வைத்துப் போட்டி போட்டுக்கொண்டு யாராவது ஒரு வீட்டில் சமையல் செய்து வைத்துப் பறி கொடுத்து வயிறெரிந்த நிலையிலிருக்கும் சாவு வீட்டினரை அன்பாய் வற்புறுத்தி அவர்களின் துக்க நிலையிலிருந்து அவர்களைக் கொஞ்சமேனும் மீட்டு எடுத்துச் சாப்பிட வைத்து ஆக வேண்டிய காரியங்களைக் கூடவே இருந்து கவனிப்பார்கள். அவர்களின் செயல்களில் உண்மையான துயரமும், மெய்யான ஆதூரமும் நிறைவான உதவும் பண்பும் நிறைந்திருக்கும்.
ஆனால் இன்றைய நிலை! இறந்தவர் வீட்டாரே உணவுக்கு ஓட்டலில் சொல்லி, இடு காட்டில் இட்டபின் அவர்களே வந்தவர்களை உணவுண்ணச் சொல்லி உபசரித்து அனுப்பிப் பிறகு அழுது கொண்டு கிடக்க வேண்டும். ஒரே தெருவில் இருப்பவர்கள் ஒரு முறைக்காகவென்று வந்து சற்று நின்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு விட்டு உடனே தங்கள் வீட்டிற்குச் சென்று தலை முழுகி அவசர அவசரமாக மெட்டி ஒலியும், செல்வியும் பார்க்கத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தஞ்சம் புகுந்து விடும் காலமாகி விட்டது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அடுத்த வீட்டில் வசிப்பவர் யார்? அவருக்கு என்ன வேலை? எத்தனை பேர் அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது கூட அனாவசியம் என்ற அளவிற்கு இன்றைய மனப் பான்மை குறுகிவிட்டதே! ஹூம்!.. வாருங்கள், நாம் குமரேசன் வீட்டிற்கு மீண்டும் போவோம்! அலம்பி விடப்பட்ட அந்த வீட்டின் வாயிற் படிகளில் கால்களை வைக்கவே கூசுகின்றது. அவ்வீட்டுத் தலைவியின் துயரத்தை எந்த அளவில் சந்தித்து நம் மனம் துவண்டு போகுமோ என்ற துயரம்கலந்த அச்சம் தான் இதற்குக் காரணமோ?
குழந்தைகளும் பெரியவர்களும் ஸ்நானம் செய்து உடை மாற்றிக் கொண்டு துயரம் கப்பிய முகத்துடன் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றனர். எல்லோர் மனதிலும் ஒரே கவலை. எப்படியாவது கங்கா கண் விழித்து எழுந்து விட வேண்டும். இத்தனை வைத்தியத்திற்குப் பிறகும் இப்படிச் சுய நினைவின்றிக் கிடக்கிறாளே! அவளில்லாமல் இந்தக் குடும்ப வண்டி நகருமோ? அளவுக்கு மீறிய பாரம் தாங்காமல் சரிந்து விடுமே! பாழாய்ப்போற யமன் குறை உயிர் போதாது, சின்னஞ் சிறு பெண் போதாது என்று அந்த சௌபாக்யவதியையும் மனம் குளிர அழைத்துப்போய் இங்கு இருப்பவர் நெஞ்சில் தீயைப் பற்ற வைத்து விடுவானோ? என்றெல்லாம் எண்ணி அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளெல்லாம் போய் விட்ட காயத்ரிக்காக அழுவதா? கண் திறக்காமல் கிடக்கின்ற அம்மாவிற்காக அழுவதா? என்று புரியாமல் கலங்கி நின்றனர். அந்த இரவு அனைவருக்கும் மிகக் கொடிய ஓர் இரவாகக் கழிந்தது. காயத்ரியின் உயிர் பிரிந்த இடத்தில் ஏற்றி வைத்த குத்து விளக்கு மௌன தீபமாய், சோகச் சாட்சியாய் அனைவரின் சோகத்திலும் பங்கு கொள்வது போல ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது.
மறு நாள் காலை…. சுந்தராம்பாள் கோவில் மணி டங்…டங்;கென்று சப்தித்து, கங்காவின் உடலில் உயிர் சேர்க்கும் பணியை மௌனமாய்த் தன் மணியொலி அலைகளால் செய்து கொண்டிருந்தது. தன் சன்னதியில் வாழ்ந்து வரும் கங்கா தன் பெயருக்கேற்ப சகலரின் பாவங்களையும் தன் புன்னகையால் மன்னித்துச், சொற்களால் அரவணைத்துத் தானும் பட வேண்டிய க‘;டங்களையெல்லாம் பட்டுத் தெளியவேண்டியதிருக்க இன்றே காலதேவன் தப்புக் கணக்கு போடப் பார்க்கிறானே என்று அந்த கங்காதரன் வந்து அருள் பாலிக்கக் கங்கையின் உடலில் அசைவு ஏற்பட்டது. அதற்காகவே காத்திருந்த பெண்மணிகளின் சோக மயமான முகத்தில் மகிழ்ச்சி, மின்னல் கீற்றாக மின்னி மறைந்தது. சூடான பானத்தைக் கரைத்து உள்ளுக்குப் புகட்டிய பின்அப்படியும் இப்படியுமாக உடலை அசைத்தாள் கங்கா. வயிற்றில் சிலீரிட்ட உணர்வு, கால்களை அசைக்கவே முடியாத வலி. வயிற்றிலிருந்த கரு கை நழுவி விட்டது என்பது புரிந்து அவளது மூடிய கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. மண்ணுக்கு இரையாவதற்கென்றே பெற்றுத் தரவேண்டிய பாவியா நான்? என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.
மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்து எழ முயன்றாள். இரண்டு பெண்மணிகள் அவளுக்கு உதவினர். மெல்ல எழுந்து அவர்களின் தோளைப் பிடித்தபடி கொல்லைப்புறம் சென்ற கங்காவின் கண்களில் கிணற்றடியில் நன்றாக அலம்பி சாத்தி வைக்கப் பட்டிருந்த மண் வெட்டி தென் பட்டது. இந்த மண் வெட்டியைக் கண்டாலே இடி இறங்கியது போலப் பயப்படுவாள் கங்கா. அதற்குக் காரணமும் இருந்தது. ஆறு மாதத்திலும், ஒரு வயதிலும், இரண்டு வயதிலுமாகக் குழந்தைகள் அடுத்தடுத்து இறக்கும்போதெல்லாம், ‘குழிவெட்ட’ இந்த மண்வெட்டியை எடுத்து முன்னால் வைத்து விடுவார் சாஸ்திரி. குழந்தையைப் பார்த்து அழுவதை விட, இந்த மண்வெட்டியைப் பார்த்து தான் பேயைக் கண்டு நடுங்கி அலறும் குழந்தை போல நடுங்கிப் பதறுவாள் கங்கா. “அய்யோ! என் குழந்தையைப் புதைக்கப் புறப்பட்டுட்டியா?” என்று கதறுவாள். அப்படிப்பட்ட கொடிய கருவியான அந்த மண்வெட்டியை அங்கு பார்த்ததும் அவளை அறியாமல் உடலில் ஒரு நடுக்கம் பரவியது.
“இது ஏன் இங்கு கிடக்கு?” என்று பலவீனமாகக் கேட்டபடி பின்புறம் போய் வந்தாள். அருகிலிருந்த இரண்டு பெண்மணிகளும் பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனரே யன்றி எதுவும் பேசவில்லை. மெதுவாக உள்ளே நடந்து வந்தாள் கங்கா. அங்கு சூழ்நிலையில் ஏதோ மாற்றமிருப்பதாக அவளுக்குப் பட்டது. ஏன் இவ்வளவு பேர் வந்திருக்கா? ஏன் ஏனோ தானோன்னு படுத்துத் தூங்கறா? ஏன் இங்கே விளக்கு எரியறது? அது காயத்ரி ஜூரமாப் படுத்துண்டு இருந்த இடமாச்சே! காயத்ரி எங்கே?
அவளைப் பிடித்து அழைத்து வந்தவர்களைப் பார்த்து, “காயத்ரி எங்கே?” என்றாள். அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்படவில்லை. ஆனால் கண்களிலிருந்து மளுக்கென்று கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தது. கங்காவிற்குத் தலை சுழல்வது போல ஓர் உணர்வு. கிணற்றடியில் மண் வெட்டி! இங்கேயோ குத்து விளக்கு! மகளைப் பற்றித் கேட்டதும் மளமள வென்று இவர்கள் கண்ணீர் பெருக்குகின்றனரே! நுண்ணறிவிற் சிறந்த கங்காவின் மனதிpல் திடீரென்று பெரிய மின்னல். தலையில் பெரிய இடி இடித்தது. “காயத்ரி எங்கேடி?” அவள் குரல் உயர்ந்தது. அதற்குள் உள்ளேயிருந்து ஓடி வந்த பர்வதத்து அத்தையும் அலமேலுப் பாட்டியும் கங்காவைப் பிடித்துக் கொண்டு, “நேத்திக்குப் பூரா நீ கெடந்த கெடை என்ன? இன்னிக்குப் போது விடியறதுக்குள்ளே எழுந்துண்டுட்டியா? ரெண்டு நாளைக்கு நீ நடக்கப்படாது. வா! வந்து படுத்துக்கோ! என்று அவசரத்துடன் அவளை இழுத்தனர்.
“எனக்கென்ன கேடு இப்போ! எல்லாத்தையும் மலை மலையா முழுங்கிட்டு நான் நன்னாத்தானே இருக்கேன்! எனக்கு ஒரு காலமும் வந்துடாது. குழந்தை காயத்ரி எங்கே? நீங்க அதை;ச் சொல்லுங்கா! என் வயத்தைச் சங்கடம் பண்றது! நீங்க நெஜத்தை சொல்லுங்கோ! என்றாள்.
அதற்கு மேலும் அவர்களால் உண்மையை மறைக்க முடியவில்லை. “கங்கா! மனசைத் தேத்திக்கோ! ஒன் ஒடம்பு இருக்கற நிலமையில நீ ரொம்ப அலட்டிக்கப்படாது!” என்று ஒருவரும், “உன்னை பகவான் ஏன் தான் இப்படிச் சோதிக்கிறானோடி அம்மா!” என்று ஒருவரும், நடுங்கும் குரலில் இடுக்கோடு இடுக்காக “காயத்ரி நேத்திக்கு நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு பகவான் கிட்ட போய்ச் சேர்ந்துட்டாடி!” என்று ஒரு பெண்மணியும் அழுதுகொண்டே கூற, “ஐயய்யோ! நான் என்ன பண்ணுவேன்! காயத்ரி நீயும் என் தலையில மண்ணை அள்ளிப் போட்டுட்டியா?” என்றலறிய கங்கா அப்படியே வெட்டுண்ட மரம் போல் சாய்ந்தாள். அவள் உடல் துவண்டது. சுற்றியிருந்தோர் தாங்கிப் பிடித்தனர். ஆங்காங்கே களைப்பில் படுத்துக் கிடந்த எல்லோரும் பதறி எழுந்தனர். அந்த அதிகாலையில் அவ்வீடு அவலக்குரலொலியால் நிரம்பியது.
பெற்ற குழந்தை பறி போனது கூடத் தெரியாமல் கிடந்த அவள் பிறவியை எண்ணி; வருந்துவதா? அவள் நிலை இனி என்ன ஆகுமோ என எண்ணிக் கலங்குவதா? இம்மட்டோ அவள் துயரம்! என்று மேலே எழுதப் பேனாவே நடுங்குகிறது. அது முதல் ஒவ்வோர் ஆண்டும் காயத்ரி மறைந்த கார்த்திகைத் திருநாளன்று ஒரு புதுப் பாவாடை, சட்டை தைத்து, நைவேத்தியம் செய்து யாராவது ஏழைப் பெண் குழந்தைக்கு அவளைக் காயத்ரி என்று நினைத்து, அதைக் கொடுப்பது கங்காவின் வழக்கமாயிற்று.