எந்த ஒருவன், நான் இந்த உடலல்ல; மனமல்ல; புத்தியல்ல; அகங்காரமல்ல; நான்-எனது என்ற அறியாமையும் எனக்குக் கிடையாது, இங்குக் காணப்படுபவை, பெறப்படுபவை எல்லாம் பிரம்மமேயாகும்! போன்ற வேத சாஸ்திர உண்மைகளைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்து, தன் சிரத்தையின் வழியாக எப்பொழுது அந்த உண்மையை அனுபவம் ஆக்கிக் கொள்கிறானோ, அப்போதே அவனிடமிருந்து மாயை விலகி விடுகிறது. பற்று அற்றுப் போய்விடுகிறது.
அந்த நிலையில் அவன் இந்தப் பிறவியிலேயே மறுபிறவி எடுத்தவன் ஆகிவிடுகிறான். பிரம்மம் சத்தியம்! ஜகத் மித்யா! என்று உணர்ந்து, சடப்பொருளான தன் தேகத்தை, அது சம்பந்தப்பட்டவற்றைத் தன்னிலிருந்து ஒதுக்கி விடுகிறான். அப்பொழுது ஜீவன் என்ற நிலையிலிருந்து நீங்கி அவனது உள்ளே ஒளிந்திருக்கும் பிரம்ம ஆற்றல் வெளிப்பட்டு விடுவதால், அவனது பிறவிக்குரிய தோஷங்கள் விலகி, பிராரப்த கர்மா உள்ளிட்ட மூன்று கர்மாக்களுமே அவனுக்கு இல்லாமற் போய்விடுகின்றன.
இப்படிப்பட்டவர்கள் மனிதப் பிறவி என்ற நிலையிலிருந்து விடுபட்டு, ஜீவன் முக்தர்கள் ஆகிவிடுகின்றனர். அதன்பின் அவர்கள் கர்மாவின் பிடியிலிருந்து விலகி பிரம்மத்தின் கருவியாகி மனித சமுதாயத்திற்கு ஞான ஒளிப் பாதையைக் காட்டுகின்ற வழிகாட்டிகளாக இயங்குகிறார்கள். மனித சரீரத்தில் இருந்தாலும் பிரம்மமாகச் செயல்படும் இவர்களை ஞானியர் என்று மக்கள் போற்றுகின்றனர்.
நான் இந்த உடல்; நான் மனிதன்; நான் இந்த ஜாதி; நான் இந்த குடும்பம் என்று சாதாரண மனிதன் எதையெல்லாம் நிச்சயமாகக் கருதுகின்றானோ அதுபோலவே ஜீவன் முக்தனும், நான் இந்த உடலில்லை; அழிகின்றதான எதுவுமே நான் இல்லை. வாழ்க்கையில் காணப்படுகின்ற எதுவுமே என்னைப் பந்தப்படுத்துவதில்லை. நான் இந்த உடலில் உள்ளே ஒளிரும் உயிர் ஆவேன்; அந்தர்யாமியாக அனைத்து உயிர்களாகவும் நிறைந்திருப்பது எதுவோ அதன் சிறுதுளி நானாகவும் இருக்கிறது; என்று உறுதியாக நினைக்கிறான். சாதாரண மனித மனப்போக்கும்; ஜீவன் முக்தர்களாக வாழ்பவர்கள் தங்களை நினைக்கின்ற விதமும் எப்படி என்பது விளங்குகின்றதா?
ஜீவன் முக்தன் என்பது உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவன் என்ற பொருளைக் கொண்டது. இந்த நிலை ஏற்பட்ட பிறகு மூன்று விதக் கர்மாக்களும் அழிந்து போய்விடும். அனைத்தையுமே விட்டவர்களான இவர்கள் உள்ளம் மலர்ந்து எப்பொழுதும் அன்பும், கருணையும், பிடிப்பற்றவர்களுமாக இருப்பார்கள். பிரம்மத்தை அறிந்தவராகவும், சாஸ்திர ஞானம் நிறைந்தவராகவும் திகழ்கின்ற ஒரு சத் குருவின் உபதேசத்தால் பக்குவப்பட்ட ஜீவன், முக்தி நிலையை அடைய முடியும்.
இந்த உலகில் உயிரோடு வாழ்கின்ற வரை பிரம்மமென உணர்ந்ததால் வரும் பேரானந்தத்தையும், தான் வேறு, இந்த உலகம் வேறு என்னும் பேதம் அறிந்ததால் ஏற்படும் அமைதியையும் ஜீவன் முக்தன் அனுபவிக்கிறான். சமதர்சனம் என்ற இந்த சமநோக்கு ஒருவனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் அனைத்தையும் ஆத்மாவாகவே பார்ப்பான். அனைத்தையும் பிரம்மமாகவே பார்க்கின்ற அந்நிலையில் அவனே பிரம்மமாகத் தன்னை உணர முடியும்.
இந்த ஞானத்தை ஒருமுறை பெற்றுவிட்டால் பிறகு அது நீங்காது; நிலைபெற்று விடும். தன்னோடு பழகுகின்ற அனைவரையும், அதுவும் பிரம்மமே! என்று சமமாக ஒருவன் பார்க்கின்றபோது அவன் ஜீவன் முக்தன் ஆகிறான். மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும், பறவைகளையும், புழு பூச்சிகளையும் கூடப் பிரம்மமாகப் பார்க்கின்ற நிலை நம்மில் ஏற்பட வேண்டும்.
எல்லாம் ஒன்று என்ற எண்ணம் சம நோக்கை உருவாக்கும். எதிலிருந்து எல்லாப் பொருள்களும் தோன்றினவோ, எதனால் அவை அனைத்தும் காப்பாற்றப்படுகின்றனவோ, அதனிடமே அவை மீண்டும் சென்று முழுமை அடைகின்றன. இந்த உண்மை அறியப்படும் வரை புனரபி மரணம்; புனரபி ஜனனம்! என்ற நிலைதான்.
எப்படி ஆகாயம் எதிலும் சம்பந்தப்படாமல் உள்ளதோ, அதேபோல் ஆத்மாவும் அனைத்தையும் கடந்தது. எதனோடும் தொடர்பில்லாதது. இந்த நிலையை அடைந்த ஜீவன் முக்தன், நான் செய்கிறேன் என்ற உணர்வோடு எந்த காரியத்தையும் செய்வதில்லை. ஆகவே செயலின் விளைவு எந்தவிதத்திலும் அவனைப் பற்றுவதில்லை. அதாவது நான் செய்கிறேன்! என்று அவன் எதையும் கருதுவதில்லை. தன்னை ஒரு கருவியாக நினைத்தே அவன் செயல்படுகிறான்.
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!” என்ற திருக்குறள் இந்த ஜீவன் முக்தர்களையே “நல்லார்” என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றது.
நமது பாரத தேசம் இப்படிப்பட்ட நல்லார்களையே தொடர்ந்து அதிக அளவில் பெற்றிருக்கும் புண்ணிய பூமியாகத் திகழ்ந்து வருகிறது. மேல்மட்டத்தில் ஊழலும், அக்கிரமங்களும், அராஜகச் செயல்களும் நிறைந்த நாடாகக் காட்சியளித்தாலும் கூட, பாரதத்தின் வேர்த்தன்மை பிரம்மத் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. எப்படி நுரைகளோடு கூடிய அலைப்பகுதி அழுக்கே வடிவமாகக் காட்சியளிக்கிறதோ அதுபோல்தான் இன்றைய பாரதத்தின் இழிநிலைக் காட்சிகள். ஆனால் ஆழமான சமுத்திரத்தில் முத்துக்களும், பவளங்களும், நவரத்தினங்களும் புதைந்து கிடப்பதைப் போல் ஆங்காங்கு ஜீவன் முக்த புருஷர்கள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தன்னைப் பிரகாசப்படுத்தித் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துபவர்களாகத் திகழ்கிறார்கள்.
இந்த உண்மைகளை அறிய விடாமல் தடுப்பது மாயையின் வேலை. மாயை என்பது ஒரு திரை. அது ஒரு ஜீவனை முக்தி அடைய விடாமல் மறைக்கின்ற தடை. இதுவும் பிரம்ம விளையாட்டே. சனாதன தர்மம் சத்தியத்தைப் பற்றிப் பேசுவதால் இதற்கு ஒரு நாளும் அழிவில்லை. இந்து மதம் என்ன சொல்கிறதோ அதை அடிப்படையாக வைத்துதான் அனைத்து மதக் கொள்கைகளும் அமைந்திருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் விளங்கும். சமுதாயமும், மதங்களும் மேம்போக்காக எதெதையோ பிதற்றிக் கொண்டிருந்தாலும், எல்லாம் ஒன்று என்ற அற்புத சத்தியத்திற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
இப்படி அடி ஆழம் வரை போய்ப் பார்க்கத் தெரியாததால் தான் ஞானம் பெற்றவர்கள் கூடத் தத்தம் அறிவு மட்டத்திற்கு ஏற்ப, அதாவது தன்னுள்ளே எதுவரை மூழ்க முடிந்ததோ அதுவரை மூழ்கி அதில் பெற்றதை வைத்து எடுத்துரைக்கின்றனர். யார் உண்மையிலேயே பிரம்மம் சத்தியம்; இந்த உலகம் அசத்தியம் என்பதை உணர்ந்து விடுகிறார்களோ அவர்கள் மௌனமாகி விடுகின்றனர். ஏனெனில், அவர்கள் அந்த நிலையில் – “இல்லாமல் போய்விடுகிறார்கள்”.! புரிகிறதா?
இந்த அனுபவத்தை உணர்த்துவதற்காகத் தான், ஸ்ரீ ஆதிசங்கரர் தமது ஒப்பற்ற அத்வைத சித்தாந்தத்தை வேதத்தின் அடிப்படையில் நிறுவினார்.அதோடு மட்டுமின்றி மக்களின் பரிணாம வளர்ச்சிக்குத் தகுந்தபடி வழிபாட்டுப் படி முறைகளை உருவாக்கி பாரதத்தை ஒன்று படுத்தி வைத்தார். சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் அளவற்றவை. பிரம்மமே வெளிப்பட்டு அனைத்தையும் சங்கரர் உருவில் இருந்து நெறிப்படுத்தி இருக்கிறது என்று துணிந்து கூறலாம்.
அப்படிப்பட்ட பகவத்பாதர், தமது இந்த அபரோக்ஷ அனுபூதி யில் மிக மிக அற்புதமான விதத்தில் ஜீவனுக்குப் படிப்படியாக ஒளிப் பாதையைக் காட்டி அழைத்துச் செல்கிறார். நடைமுறையில், ஞானியானாலும் பிராரப்தம் உண்டு! என்றே பெரும்பாலும் சொல்வது வழக்கம். உலகம் உண்மை என்றும் ஒரு சித்தாந்தம் நிலைபெற்றிருக்கிறது. இறைவன் வேறு; ஜீவன் வேறு – என்றும் சொல்லப்படுகிறது. இங்கு ஸ்ரீசங்கரர் அடுத்து வரும் பாடல்களில், ஞானிக்குப் பிராரப்தம் கிடையாது – என்பதை விளக்குகின்றார்.
90. ஆத்ம ஞானம் ஏற்பட்ட போதிலும் பிராரப்தம் விடுவதில்லை என்று சொல்லப்படுவது வழக்கம். ஆனால் அது சாஸ்திரப் பிரமாணத்தால் இப்போது, அவ்வாறு இல்லை! என்று மறுக்க படுகிறது.
91. ஆத்ம தத்துவ ஞானமேற்பட்ட பிறகு சரீரம் போன்றவை பொய் என்பது ஞானிக்குத் தெரிந்து விடுகின்ற படியால், எப்படி ஒருவன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பிறகு, தான் கண்ட கனவு பொய் என்பது தெரிந்துவிடுகிறதோ, அவ்வாறு ஞானம் அடைந்த பிறகு தேகம் சம்பந்தப்பட்ட கர்மாக்களும் ஞானிக்கு இல்லை என சாஸ்திரம் சொல்கின்றது.
92. முன்னொரு பிறவியில் செய்யப்பட்ட கர்மாவே ஒரு ஜீவனுக்குப் பிராரப்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஞானியான புருஷனுக்கு முன் ஜன்மமென்பது கிடையாததால் அவனுக்குப் பிராரப்தமும் எப்படியும் இராது.
93. எப்படி கனவில் காணப்படும் சரீரம் (நான்) என்பது கற்பனையோ, அதுபோல உண்மையாய் தெரியும் இந்த சரீரமும் (நானும்) பொய்த் தோற்றமே ஆகும். இந்த தேகம் பொய் என்று அறிந்து விட்டால் பிறகு பிறவி எப்படி வரும்? பிறவியே இல்லை என்பது புரிந்த பிறகு நான் (அகம்) என்பது ஏது?
94. குடத்திற்கு எப்படி மண் உபாதான (அடிப்படை) காரணமோ அப்படியே பிரபஞ்சத்திற்கு உபாதான காரணம் அறியாமை என்று உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அறியாமை அழிந்த பிறகு பிரபஞ்சம் எங்கே இருக்க முடியும்?
95. எப்படி இருட்டில் கிடக்கும் கயிறைப் பாம்பு என்று கற்பனையாக நினைத்துக் கொண்டு ஒருவன் பயந்து நடுங்குகிறானோ அதேமாதிரி, சத்தியமாயுள்ள பிரம்மத்தை அறிந்து கொள்ளாமல், மோகம் அடைந்த புத்தியோடு வாழ்பவன் ஜகத்தைப் பார்க்கிறான்.
96. இது கயிறு என்பது தெரிந்துவிட்டால் பிறகு பாம்பு என்ற கற்பனை இருக்காது. அப்படியே இந்தப் பிரபஞ்சத்திற்கு அடிப்படைக் காரணமாயுள்ள பிரம்மம் அறியப்பட்டு விட்டால், ஜகத் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.
97. இந்த சரீரம் என்பதும் பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கும் ஒன்றே ஆதலால் இதற்குரியதான பிராரப்தம் என்று சொல்லப்படுகின்ற கர்மா எப்படி இருக்கும்? ஆத்ம ஞானம் அடையாத ஜனங்களுக்குச் சொல்வதற்காகத்த தான் வேதம், பிராரப்தத்தைப்பற்றி, அது இருக்கிறது என்று சொல்லி இருக்கிறது.
98. “மேலானதும், கீழானதுமான (காரணமாகவும், காரியமாகவும் உள்ள) எல்லாப் பொருள்களாகவும் இருக்கும் பிரம்மத்தை நான் என்று அறிந்து விட்டால், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால், அவனுடைய கர்மாக்கள் நசித்து விடும்”. என்று வேதம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.
99. இந்த உண்மையை அறியாதவர்கள் பிடிவாதமாக ஞானிகளுக்கும் பிராரப்தம் உண்டு என்று சொல்வார்களேயானால் அப்பொழுது இரண்டு வித அனர்த்தங்கள் வந்து சேரும். வேதாந்த உண்மையைக் கைவிட்டதாக அது ஆகிவிடும்.